Tuesday, May 18, 2010

பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு

'

ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப்பணியாளரை சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். இதுவே பெண்ணிய சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்து, தான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்கிறார். அம்பேத்கர் சாதிஒழிப்பு போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்பு போராளியாக அறியப்பட்டார். பெரியார் சாதி ஒழுப்போடு சேர்த்து பெண்ணுரிமைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவர் பெண்ணியவாதியாக அறியப்படுகிறார். அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களினூடாகத் தேடி அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை கண்டெடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு தனி அஜெண்டாவாக பெண்ணியத்தை வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே அவருக்கு எல்லாவற்றையும் விட சாதி ஒழிப்பும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையும்தான் முக்கியமானதாக இருந்திருக்க முடியும். அப்படித்தான் இருந்தது. பெரியார், அம்பேத்கர் இருவரின் எழுத்துக்களையும் வாசித்தவர்களுக்கும் தெரியும் பெண்ணியவாதக் கருத்துக்களும் பெண் மையக் கருத்துக்களும் யாரிடம் மேலோங்கி இருந்தன என்பது.

அம்பேத்கரின் மக்கள் விளிம்புநிலை மக்கள். அவர்களுக்கான போராட்டமே பெரிதாய் இருக்கும்போது பெண்ணியம் குறித்த சிந்தனை இயல்பாகவே இரண்டாம்பட்சமாகிவிடுவது இயற்கையே. இந்நிலையில் “அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்” என்று அரச.முருகுபாண்டியன் தொகுத்தளித்துள்ள நூலின் அணிந்துரையில் “”பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் உள்ள கருத்துக்கள் அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகளை மையமிட்டவைஎன அரங்க மல்லிகா குறிப்பிடுகிறார். இதனை அம்பேத்கரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில் ’’பெண் ஏன் அடிமையானாள்?’’ நூலில் காணப்படும் தீவிர கருத்துக்கள் போல அம்பேத்கர் எங்கும் குறிப்பிடவில்லை. அவருக்கான பாதை வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தன் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளினூடாக பெண்ணியத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அம்பேத்கர் செயல்பட்டார். பார்ப்பனியத்தைப் பற்றிச் சொல்லும்போது பெண்களை பார்ப்பனியம் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று விளக்குகிறார். பெரியார் பெண்கள் படும் இன்னல்கள் குறித்துப் பேசுகையில் அவர்களின் துயரங்களுக்கு பார்ப்பனியமும் ஒரு காரணமாக இருக்கிறது என்று மனுஸ்மிருதியை காரணம் கூறுகிறார். இருவருமே மனுவை எதிர்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் அம்பேத்கரின் கருத்துக்கள மையமிட்டவை என்ற கருத்து ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. அரங்க மல்லிகாவின் இந்தக் கருத்தில் நூலாசிரியர் அரச.முருகுபாண்டியன் முரண்படுவாரேயானால், தனது முன்னுரையில் அவர் அதனைக் குறிப்பிட்டிருக்க் வேண்டும். ஆனால் அவ்வாறு குறிப்பிடாதது அவரும் இந்தக் கருத்திற்கு உடன்படுகிறாரோ என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது.

பெரியாரை தலித்துகளுக்கெதிராக நிறுத்தும் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணமிது. இணைவதற்கான புள்ளியை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். மூன்று தரப்பினருக்குமான பொது எதிரியின் தரப்பு மிக பலம் வாய்ந்ததாக இருக்கும்போது ஒற்றுமை மிகவும் அவசியம். பெரியாரை முன்வைத்து இடதுசாரிகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக இருக்கும் முரண்பாடுகளும், அதே பெரியாரை முன்வைத்து அம்பேத்காரிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இருக்கும் கருத்துமோதல்களும் களையப்பட வேண்டும். பெரியார் என்ற ஆளுமையின் கருத்துக்கள் இந்தியா போன்ற சாதிய அடுக்குகள் நிறைந்த, பெண்ணை அடிமைப்படுத்துகிற சமூகம் இருக்கும் வரை எப்போதும் எந்தக்காலத்திலும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

“அண்ணலின் பெண்ணிய சிந்தனைகள்” என்று நூலின் தலைப்பு இருக்கிறது. ”அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகள்” என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள், ”அண்ணல்” என்றால் காந்தி என்று பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது ஒரு சாதாரண வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக்கொள்ள சாத்தியமுண்டு.

அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகளுக்குள் போவதற்கு முன் ஆதிகாலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து, பின்னாளில் மாற்றம் பெற்று பெண்ணை இழிவாகப் பார்க்கும் இலை உருவானது குறித்து சுருக்கமாக ஒரு வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார் நூலாசிரியர் அரச.முருகுபாண்டியன். பெண்களின் மீது கற்பு என்ற சுமை ஏற்றப்பட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறார்.“எல்லா இயக்கங்களும் (பிஜேபி முதல் இடதுசாரிகள் வரை) பெண் பற்றிய புனைவுகளைக் கேள்வி கேட்பதாய் இல்லை....இந்நிலையில் சமூகம் கட்டமைத்திருக்கிற எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குபடுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவையாகும்” என்கிறார் நூலாசிரியர். வாசிப்பவர்களுக்கு இயல்பாகவே இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1) இந்நூலை “பெண்ணுரிமை, மண்ணுரிமை, த்மிழ்தேசத் தன்னுரிமை, தலித் உரிமை, தமிழ் உரிமை என அனுதினமும் களமாடிவரும்” தொல்.திருமாவளவனுக்கு சமர்ப்பிக்கிறார். இந்த சமர்ப்பணத்தையும், நூலாசிரியர் நூலின் உள்ளே கூறும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. குஷ்பு தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு குறித்து முரண்பட்ட கருத்துக்களைக் கூறினார் என்று கூறி சினந்து தொல்.திருமாவளவன் கட்சியினர் நடத்திய கூத்துகள நினைவுக்கு வருகின்றன. இவற்றில் நூலாசிரியருக்கு உடன்பாடு உண்டா இல்லையா?

2) எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவை என்றால்.. பெண்ணிய இயக்கங்கள் மட்டும் எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தினால் போதும்.  ஆண்கள் இருக்கும் மற்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை புனிதப்படுத்தி..அடிமைப்படுத்தி வைத்திருக்கலாமா? பெண் குறித்த புனிதக் கருத்தாடல்களை உடைப்பதற்கு பெண்கள் மட்டுமே முயன்றால் போதுமானதாக இருக்குமா என்ன?

திவான் ஜெர்மனிதாஸ் எழுதிய 'மகாராஜா' நூலிலிருந்து கிடைத்த தகவலான, பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் யோனியை மருத்துவரை வைத்து அறுத்துக் கிழித்து அதன்பின் புணர்ச்சியில் ஈடுபட்ட வன்கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது போன்ற சில முக்கியமான விஷயங்களை நூலினிடையே தெரிவிக்கிறார் நூலாசிரியர். அது போலவே மாதவிலக்கினால் வர இயலாத தேவதாசிப் பெண்களுக்கு அண்ணந்தாள் பூட்டும் கொடுமையையும் பதிவு செய்கிறார். பௌத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம், இந்து சமயம் சமயங்கள் முன்நிறுத்தும் பெண்களின் நிலை குறித்து சுருக்கமாக நூல் பேசுகிறது. மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ளதை அம்பேத்கர் தன் ”பார்ப்பனியத்தின் வெற்றி' யில் குறிப்பிடுகிறார். அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்து விதவை மறுமணச்சட்டம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்துத் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்தும் பெண் விடுதலையை எதிர்நோக்கிய கூர்மையான கருத்துக்களைக் கொண்டிருந்தன என நூல் எடுத்துக்காட்டுகிறது.

பதேரிப்பிரபுக்களிடம் கைம்பெண் மறுமணம் வழக்கத்தில் இருந்தது. இவ்வழக்கம் பார்ப்பனர்களிடம் இல்லை என்பதால் அப்படி இருந்தால்தான் உயர்ந்தவர்களாக ஒத்துக்கொள்ளப்படுவோம் என்ற நினைப்பில் அவ்வழக்கத்தைத் துறந்த பதேரிப்பிரபுக்கள் குறித்து அம்பேத்கர் குறிப்பிடும்போது இளையராஜா நினைவுக்கு வருகிறார். பெண்களை சாராயம் காய்ச்சுவோராகவும், கசாப்புக்காரர்களாகவும் பணிபுரிவதை அம்பேத்கர் வரவேற்கிறார். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிறார். பெண்களை மெல்லிடையாளாக பார்க்கும் சமூகத்தில் அம்பேத்கர் மாறுபட்டு நிற்கிறார்.

மகப்பேறு நல உதவி மசோதா மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவருகிறார் அம்பேத்கர். இது அம்பேத்கர் பெண்கள் மீது கொண்ட அக்கறையை நமக்கு பறைசாற்றுகின்றது. இது போல ஆங்காங்கே பெண்களுக்கு தன்னால் இயன்றவரை போராடிப் பெற்றுத்தருகிறார் அம்பேத்கர். ஆனால் இதை எவ்வாறு பெண்ணிய சிந்தனை என்று கூற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ”அம்பேத்கர் பார்வையில் பெண்கள்” அல்லது “பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு” என்று இந்நூலின் தலைப்பு அமைந்திருக்குமானால் இது போன்ற தகவல்கள் நூலில் இடம்பெறுவது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் பெண்ணியம் என்பதன் பொருள் ஆழமானது. நூலை வாசித்து முடிக்கும்போது இவ்வளவுதான் அம்பேத்கர் பெண்ணியம் குறித்துப் பேசியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கரின் களப்பணி வேறு தளத்தில் இருந்ததால் அது தொடர்பான பணியில் எங்கெல்லாம் பெண்கள் விடுதலையை முன்னெடுக்க முடியுமோ, அங்கெல்லாம் முன்னெடுத்தார். அதனால் திரும்ப திரும்ப சாதி ஒழிப்பு, மகப்பேறு நல உதவி மசோதா, இந்து சட்ட மசோதா இவற்றின் மூலமாக மட்டுமே அம்பேத்கரின் பெண்மையச் சிந்தனைகளை எடுத்துக்கூற விழைகிறார் நூலாசிரியர்.

பெண்ணியவாதிகளின் மேல் நூலாசிரியர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார். பால் வேறுபாடுகள் நிறைந்த நுண் அரசியலை வர்க்க/இன அடிப்படையில் பார்க்கும் பார்வை பெண்ணியவாதிகளுக்கு கூர்மையாக உள்ளதென்றும், சாதியப்பார்வை இல்லையென்றும் கூறுகிறார். எல்லா பெண்ணியவாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்களா? தலித் பெண்ணியம் குறித்த புரிதல்கள் பெருகியுள்ள வேளையில் பொத்தாம் பொதுவாக அனைத்து பெண்ணியவாதிகளின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

அம்பேத்கரின் இந்து சட்ட மசோதாவில் மிதாஷரா முறையைத் தவிர்த்து தயபாகா முறையை பின்பற்றவேண்டுமென்கிறார் அம்பேத்கர். மிதாஷரா சட்டப்படி ஆண் வர்ரிசுகளுக்கே முன்னுரிமை. தயபாகாவில் இரு பாலின வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. அதுபோலவே மணமக்கள் கண்டிப்பாக ஒரே சாதியைச் சார்ந்தவராகவோ, உட்பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் புதிய இந்து சட்ட மசோதாவில் நீக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் முற்போக்கான பல கருத்துக்களுடன் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆவலோடு காத்திருந்தபோது நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேறற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே அமைச்சரவையிலிருந்து விலகுகிறார் அம்பேத்கர். இப்படி பல செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன.

அம்பேத்கரின் மொழியில் இந்நூல் அமையவில்லை. நூலாசிரியரின் மொழியிலேயே உள்ளது நூல். இது ஒரு வகையில் புதிய முயற்சி. ஆனால் அம்பேத்கரின் அத்தனை தொகுதிகளையும் வாசித்து அதிலிருந்து பெண்மையச் சிந்தனைகளைத் தேடி எடுப்பது சிரமமான காரியம் தான். அவற்றை பிழிந்து சாறெடுத்துக் வாசிக்கக் கொடுத்த அரச.முருகுபாண்டியனின் உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

'தலித் முரசு' இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்

6 comments:

  1. இப்போதுதான் பார்த்தேன்!!! மீண்டும் படித்துவிட்டு வருகிறேன்!!!

    ReplyDelete
  2. அன்பின் கவின்!! ஆழமான விசயங்களை தெளிவுடன் அணுகும் விதம் அருமை!!!

    ReplyDelete
  3. அண்ணலின் பெண்ணிய சிந்தனைகள்” என்று நூலின் தலைப்பு இருக்கிறது. ”அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகள்” என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள், ”அண்ணல்” என்றால் காந்தி என்று பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது ஒரு சாதாரண வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக்கொள்ள சாத்தியமுண்டு///


    இந்தக் கருத்தைத் தாங்கள் நூல் வெளியீட்டுவிழாவிலேயே குறிப்பிட்டீர்கள்!!! உண்மைதான்!!

    ReplyDelete
  4. தேவன் மாயம்!

    இந்தக் கருத்தை மட்டுமல்ல, கட்டுரையிலுள்ள அனைத்து கருத்துக்களையுமே விழாவில் பேசும்போது குறிப்பிட்டேன். பக்க நெருக்கடி காரணமாக சில விஷயங்களை கட்டுரையில் சேர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  5. Anonymous12:20 pm

    அரச.முருகுபாண்டியனின் நூலை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆயினும் அவரது முயற்சி பாராட்டத் தக்கதாகப் படுகின்றது.
    /இந்நூலை “பெண்ணுரிமை, மண்ணுரிமை, த்மிழ்தேசத் தன்னுரிமை, தலித் உரிமை, தமிழ் உரிமை என அனுதினமும் களமாடிவரும்” தொல்.திருமாவளவனுக்கு” சமர்ப்பிக்கிறார். இந்த சமர்ப்பணத்தையும், நூலாசிரியர் நூலின் உள்ளே கூறும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன./
    முருகுபாண்டியன் போன்ற சிந்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தலித்துக்களுக்காக இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லிக்கொண்டு, வெறும் கொடிகட்டவும் கட்டவுட் வைக்கவும் 'அண்ணன்' வரும் பாதையில் முன்னால் பைக்குகள் கார்களில் காற்றினும் கடிதாக விரைந்து ஓரம்போ ஓரம்போ என ஜனங்களை விரட்டவும் மட்டுமே தலித் இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்களை விட்டு ஓடிவிடாமல் இருக்க தந்திரமாக அவர்களை பல்வேறு வழக்குகளில் சிக்கவைத்து கோர்ட் கேஸ் என்று அலையவைத்து வாழ்நாளை வீணடிக்கும் வேலையை செய்துவரும் திருமாவளவன் போன்ற தலித் எதிரிகளை கும்பிடு போடும் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். உங்களைப்போன்ற உயர்ந்த சிந்தனையாளர்கள் இதுபோன்ற அற்புதமான நூல்களை கடும் உழைப்பை செலுத்தி எழுதுகின்றீர்கள். உயர்சாதி திமிரின் வெறும் 15 அடி சுவரை உடைக்கவே ஒரு வருடம் எடுத்துக்கொண்ட தலித் சம்பந்தியான கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது சமூக காவலர் விருது... என அள்ளிக் கொடுக்க திருமாவளவன் போன்றோருக்கு வெளியே சொல்ல முடியாத ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பெண்ணியம் குறித்த சரியான சிந்தனைகள் பார்வைகள் திருமாவளவனுக்கு இல்லை என்பதையும் குஷ்பு
    விசயத்தில் கண்டோம். முருகுபாண்டியன் போன்ற சிந்தனையாளர்கள் உங்கள் உயர்ந்த உழைப்பை திருமாவளவன் போன்ற சுயநலமிகளின் காலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகின்றேன்.
    இக்பால்

    ReplyDelete
  6. Hi Kavin, good analysis & review

    ReplyDelete